Monday, 18 August 2014


உடலுக்கு உறுதி அளிக்கும் ராகி உணவுகள் 

ராகி இதன் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும். நம் முன்னோர்கள் நீண்ட காலம் நேயற்ற வாழ்வு வாழ்ந்தற்கு இது போன்ற சத்துள்ள தானியங்களை உணவாக உண்டதால் தான்....!!! கொங்கு நாட்டில் ராகி பிரதான உணவாக இருந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை....!!!

ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது. பலர் ராகி களி சிறைச்சாலைகளில் கொடுக்கும் உணவு என்று கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். ராகியில் உள்ள சத்துக்கள், அரிசியில் உள்ள சத்துக்களை விட அதிகமானதாகும். ராகியின் குணங்களை பட்டியலிட்டு பார்ப்போமேயானால், அதன் பலனை தெரிந்து கொள்ளலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.
அரிசியில் உள்ள சத்துக்கள்
புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ராகியின் பயன்கள் :

ரத்தம் சுத்தியாகும்
எலும்பு உறுதிப்படும்
சதை வலுவாக்கும்
மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரீகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.

‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

ராகி இட்லி

தேவை


புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)
உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்.
உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.

ராகி உளுந்து தோசை

தேவை


ராகி மாவு-4கப்
வெள்ளை உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப
புளித்த தயிர்-மாவு ஊறவைக்கத் தேவையான அளவு

செய்முறை

உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ராகி மாவை லேசாகப் புளித்த கட்டித் தயிரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நுரைக்க அரைத்து கடைசியில் ஊற வைத்த மாவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எடுத்து, மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் காலை வரை மூடி வைக்கவும்.
மறுநாள் நன்றாகக் கலந்து விட்டு மசால் தோசை போல மத்தியில் சட்டினி பூசி, ஏதாவது மசாலா வைத்து பரிமாறலாம்.
வெங்காயம் தூவி ஊத்தப்பம் போலவும் ஊற்றலாம்.

ராகி அடை

தேவை

ராகி மாவு-2கப்
சோயா மாவு-1/4கப்
தண்ணீர்-21/2கப்
எண்ணெய்-சுடுவதற்கு
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-11/2 டீஸ்பூன்
உருவிய முருங்கை இலை-1/2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்

செய்முறை

தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டி கிளறி உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வரும் போது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும்.
அதோடு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கை கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எலுமிச்சையளவு மாவை எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி கல்லிலே போட்டு இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ராகி பயத்தம் பருப்பு காரப் புட்டு

தேவை


ராகி மாவு-1கப்
பயத்தம் பருப்பு-2டே.ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-2டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்-2
கடுகு-1/2டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி-1டே.ஸ்பூன்

செய்முறை

ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசறவும்.
இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்கவும்.
குக்கரின் உள்ளே ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு மேலே மெல்லிய துணியை கட்டி அதில் மாவை பரவலாகப் பரப்பி வைக்கவும். (இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைக் கட்டியும் வைக்கலாம்)
ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.
பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்கவும். கொத்தமல்லி தழையை மேலே பரவலாகத் தூவி பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

தேவை

ராகி மாவு-1கப்
கோதுமை மாவு-1கப் (ஆவியில் வேக வைத்தது)
கடலை மாவு-1/4 கப்
உப்பு-தேவைக்கேற்ப
சுடுதண்ணீர்-மாவு பிசைய

செய்முறை

கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
வறுத்த மாவுகளோடு கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். (3 நிமிடங்கள்)
காய்கறி மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.

ராகி ரொட்டி

தேவை

ராகி மாவு-2கப்
நீர்த்த புளிக்கரைசல்-2கப்
பச்சை மிளகாய்-4
உப்பு-தேவைக்கேற்ப
முருங்கைக் கீரை உருவியது-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய்-2டீஸ்பூன்
எண்ணெய்-சுடுவதற்கு

செய்முறை

ஒரு வாணலியில் புளிக் கரைசலை அளந்து ஊற்றி அதில் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.
மறுபடியும் அடுப்பின் மேல் வைத்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.
முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவும்.
ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவும்.
கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவும்.
இரண்டாவது பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.


பழச்சாறில் உள்ள  குறைபாடுகள் 

பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.

மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.

அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.


உடல் எடையைக் கட்டுபடுத்தும் தக்காளி 

தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி' உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கெனவே நாம் அறிந்த விஷயம்.

தற்போது, தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில், தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர்.