Sunday, 14 February 2016

மாலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகள்!!!

காலை, மதிய, இரவு உணவுகளை விட பல நேரங்களில் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. கலோரிகள் அதிகமான இவற்றை உண்ட பிறகு எந்த வேலையும் செய்யாமல் நாம் நேரடியாக உட்கார்ந்து வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதனால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. இனி இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனி உணவுகள் பற்றி காணலாம்...

சமோசா

டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.

கச்சோரி

எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.

வடை, பஜ்ஜி

டீ, காப்பியின் உடன் பிறவா சகோதரர்கள் இந்த பஜ்ஜி, போண்டா, வடை போன்றவை. பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள்.

ஜிலேபி

சிலர் மட்டும் தான் இடைவேளையில் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.

வடா-பாவ்

மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றும் இதில் இருக்கிறது. எனவே, இதை கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது.

சேவா- பூந்தி

இது கூடவா உடலுக்கு கேடு என சிலர் கேட்கலாம். அளவாக இருக்கும் வரை அனைத்தும் அமிர்தம் தான் அளவை மீறும் போது தான் பிரச்சனை உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

பானிப்பூரி

பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.